கனவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும்
கவிதைகள் ஆயிரம் கனவுகளை சொல்லும்
கலங்கிய நீரோடை நினைவுகளுடன்
அம் மனை வீதி வழியே
நாட்கள் பல கழிந்து ..........
அமர்ந்து அலட்டிய சுவர்க்கரைகள்
ஆளில்லாமல் இன்று தனிமையிலே
எத்தனை நாட்களை கடந்திருப்போம்
அம்மாவின் திட்டுப் பேச்சுகளுடன் அதன்மீது
நாட்கள் ஆயிரம் கடந்து போனாலும்
நினைவுகள் காலவதியின்றி நெஞ்சோரத்தில்
குட்டிக் கதைகள் பேசிய
குட்டிச்சுவர் மீது அன்று
எழுதி வைத்த கிறுக்கல்கள் மட்டும்
இன்று ஏனோ பொக்கிஷங்களாய்
தொட்டுப் பார்க்கிறேன் மெல்ல......
வெளியே போகிறேன் என்றேன்
"ஏழு கழுதை வயசாய்ப் போச்சு
இன்னுமா போகிறாய் ஊர் மேய"
என் அம்மாவின் அதட்டல் குரல்
சமையலறை வாசல் வழியே
"உன் போன்ற பெடியங்கள் இன்று
ஆயிரமாயிரமாய் கை மேலே
உனக்கு மட்டும் இங்கே தண்டமாய்"
மேலும் ஒரு குரல் காதில் விழ
சட்டை செய்யாமல்
சட்டையை மாட்டிக் கொண்டு
வெளியே போன போது
"உன் வீட்டிலுமாடா இப்படி"
என்றான் ஒரு நண்பன்
நிம்மதியுடன் மனம்
அன்று சிறகடித்த நினைவுகள்
இன்று என் மனதின் ஓரம்
அனல் காற்றாய்
எத்தனை காலைகள்
எத்தனை மாலைகள்
கட்டாம் தரை சாலைகளிலும்
கடற்கரை ஓரங்களிலும்
காரணமின்றி ஒரே பாதை வழியே
தேய்ந்து போன பாதணிகள்
இன்றும் அந்த கதைகள் சொல்லும்
மீண்டும்
அம்மனை வீதி வழியே
நினைவுகளில் மூழ்கிய போது
"யாரப்பா அங்கே "
எங்கேயோ கேட்ட குரல்
கனவுகளை மீண்டும் நிஜமாக்க
ஒலி வழி நோக்கி புன்னகையுடன்
குட்டி சுவர் மறுபடியும்
எனை பார்த்து சிரிக்கிறது .............
இப்படிக்கு
அன்புடன்......... Prakhash


0 comments:
Post a Comment